மகன் இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெற்றோர் தற்கொலை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மகன் பாம்பு கடித்து இறந்த சோகம் தாங்க முடியாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (45). அவரது மனைவி சவுந்தரவள்ளி. அவர்களின் குழந்தைகள் அஜய் (15), திவ்யா (15). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜய் பாம்பு கடித்து இறந்தான். இதையடுத்து அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது. மகனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெற்றோர் துன்பப்பட்டனர்.
மகன் இல்லாத உலகில் வாழ வேண்டாம் என்று நினைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை அரளி விதையை அரைத்து பாலசுப்பிரமணியமும், சவுந்தரவள்ளியும் குடித்துவிட்டு மகள் திவ்யாவுக்கும் கொடுத்தனர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டுக் கதவை திறந்து பார்த்தனர். அப்போது பாலசுப்பிரமணியமும், சவுந்தரவள்ளியும் இறந்து கிடந்தனர், திவ்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே திவ்யாவை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிநத் பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் பாலசுப்பிரமணியம் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
6 மாதங்களுக்கு முன்பு உயிருக்கு உயிராய் வளர்த்த எங்களது அன்பு மகன் அஜய் பாம்பு கடித்து இறந்து விட்டான். அவன் இல்லாத உலகத்தில் வாழ்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் அவன் இருக்கும் இடம் தேடி செல்கிறோம். எங்கள் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications