ராமஜெயம் கொலையாளிகள் சிக்கினரா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பினரா...?

போலீஸ் தரப்பில் நடந்து வரும் விசாரணை அனைத்துமே படு ரகசியமாக இருப்பதாலும், போலீஸ் தரப்பில் ஒரு வார்த்தையைக் கூட வெளியே விடாமல் கமுக்கமாக இருப்பதாலும், கே.என். நேரு குடும்பத்தால் வரலாறு காணாத அமைதி காப்பதாலும் இந்த வழக்கு விவகாரம் பெரும் மூடு மந்திரமாகவே இருக்கிறது.
ராமஜெயம் கொலையுண்டு இரண்டு வாரங்களாகி விட்டது. இதுவரை இந்த வழக்கில் தெளிவு நிலை ஏற்படவில்லை. யாரையும் போலீஸார் பிடித்துள்ளதாக தெரியவில்லை - அதிகாரப்பூர்வமாக. தினசரி பலரிடம் விசாரணை நடந்து வருவதாக மட்டுமே போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் விசாரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது புதிதாக 2 தகவல்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. முதல் தகவல் என்ன சொல்கிறது என்றால், ராமஜெயத்தைக் கொன்றவர்களைப் போலீஸார் கூண்டோடு பிடித்து விட்டதாகவும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறுகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று உயர் மட்டத்திலிருந்து ஒரு உத்தரவு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சட்டசபை தற்போது நடந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையாக மானியக் கோரிக்கை கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கை வரும் வரை ராமஜெயம் கொலையாளிகள் கைது குறித்த விவரத்தை வெளியிட வேண்டாம் என்று திருச்சிக்கு உத்தரவு போயுள்ளதாம்.அப்படி வெளியானால் அதை வைத்து திமுகவினர் சட்டசபையில் பிரச்சினை கிளப்பலாம் என்றும், எனவே காவல்துறை மானியக் கோரிக்கை முடிந்த பிறகு கைது விவகாரத்தை பகிரங்கப்படுத்தலாம் என்றும் போலீஸாருக்கு உத்தரவு போயிருப்பதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தத் தகவல் கூடுதலாக தெரிவிக்கிறது.
இன்னொரு தகவல் என்ன சொல்கிறது என்றால் கொலையாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போய் விட்டதாக சொல்கிறது.
கொலை நடந்த 29-ந்தேதி முதல் கடந்த 7 -ந் தேதி வரை திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களில் வெளி நாட்டிற்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றவர்கள் யார்? யார் என பட்டியல் சேகரித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் பிரிவு போலீசில் கடந்த 29-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை விமானம் மூலம் வெளிநாட்டுக்கு சென்ற பயணிகள் பட்டியலை தனிப்படை போலீசார் பெற்றனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு விமானம் மூலம் தினமும் 2500 பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பட்டியில் ராமஜெயத்தின் கொலை தொடர்பாக போலீசார் சந்தேகிக்கும் நபர்கள் அவரது செல்போன்களில் அதிகமுறை தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் யாராவது வெளிநாடு சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதே போன்று ராமஜெயம் கொலை நடப்பதற்கு முன்பு கடந்த மாதம் யார்-யார் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்தனர் என்ற பட்டியலும் பெறப்பட்டது. இதில் தனிப்படை போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
இப்படி ராமஜெயம் கொலை தொடர்பாக தொடர்ந்து ஊகச் செய்திகளே தொடர் கதை போல வெளியாகி வருகிறது. இதை தடுத்து நிறுத்தவோ, அல்லது விசாரணை குறித்த விவரங்களை வெளியிடவோ காவல்துறை ஏன் தயங்குகிறது என்பது தெரியவில்லை. அதேபோல திமுக தரப்பிலும், கே.என். நேரு குடும்பத் தரப்பிலும் ஏன் பெருத்த அமைதி காக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.












Click it and Unblock the Notifications