ஆவணங்களைத் தர முடியாது...சசிகலாவின் அப்பீல் டிஸ்மிஸ்: அடுத்தது என்ன?
பெங்களூர்: சசிகலா கேட்டுள்ள 400க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் தர அரசுத் தரப்பு கடும் ஆட்சேபனை எழுப்பியதால், சசிகலாவின் மேல் முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சசிகலா தரப்பு அடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிகிறது.
மறுபடியும் மொதல்ல இருந்து எண்ணுங்க என்று ஒரு படத்தில் பரோட்டா திண்ணும் போட்டியில் கடைக்காரரை வம்புக்கு இழுக்கும் காமெடி நடிகர் சூரி கணக்காக பெங்களூர் சொத்துக் குவிப்பின் போக்கு திசை மாற ஆரம்பித்துள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வேலையில் சசிகலா தரப்பு மீண்டும் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனி நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வந்த நிலையில் திடீரென 400க்கும் மேற்பட்ட ஆவணங்களின் நகல் வேண்டும். அப்போதுதான் சரியாக பதிலளிக்க முடியும் என்று மறுபடியும் முதலிலில் இருந்து என்ற கணக்கில் புதிய கோரிக்கையை வைத்தார் சசிகலா.
ஆனால் இதை தனி நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை சசிகலா அணுகினார்.
அதில், வழக்கில் 400க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அரசு வழங்காமல் இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்டம் 313-ன் கீழ் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு, தான் பதில் கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. அதனால் தனக்கு வழக்கு குறித்த ஆவணங்கள் தரப்பட வேண்டும் என கூறியிருந்தார் சசிகலா.
இந்த மனு நீதிபதி ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், சொத்து குவிப்பு வழக்கினை தாமதப்படுத்தவே ஆவணங்கள் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஆனந்த், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை சசிகலா தரப்பு அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications