கர்நாடகத்தின் 5 மாவட்டங்களில் காலூன்றிய மாவோயிஸ்டுகள்: முதலமைச்சர் சதானந்த கவுடா கவலை
டெல்லி: கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 5 மாவட்டங்களிலும் மாவோயிஸ்டுகள் தங்களது நடவடிக்கையை அதிகரித்து வலுவடைந்துள்ளனர். அவர்களை எதிர்கொள்வதற்கு மாநிலத்தில் போதுமான உள்கட்டமைப்பும், படையும் கிடையாது.
மாவோயிஸ்டுகளை ஒழிக்க கூடுதல் நிதியுதவியும், படை வீரர்களையும் கொடுத்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் இதை மீண்டும் வலியுறுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
கோப்ரா பயிற்சி
மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீஸ் பிரிவினருக்கு போதுமான பயிற்சி இல்லை. இதனால் மாவோயிஸ்டு எதிர்ப்பு நடவடிக்கையின் போது திண்டாடுகிறார்கள்.
மாவோயிஸ்டுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சரிவரத் தெரியவில்லை. இதனால் மாநில போலீஸ் படையினருக்கு மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியை "கோப்ரா' படைப் பிரிவினர் மூலம் அளிக்க வேண்டும்.
மாவோயிஸ்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கு வனப் பாதுகாப்பு சட்டமும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்தச் சட்ட நடைமுறையை தளர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்திலும் தொடர்ந்து மெüனம் காத்து வருகிறது. இனிமேலாவது வனப் பாதுகாப்பு சட்ட நடைமுறையை தளர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.