வடைக்குப் பதில் 5 பவுன் நகையைத் தூக்கிச் சென்ற காக்கா... விரட்டிப் பிடித்த மக்கள்!
குமரி: குமரி மாவட்டத்தில் 5 பவுன் தங்க நகை பொட்டலத்தை தூக்கிச் சென்ற காகத்தை 200 மீட்டர் வரை துரத்திச் சென்று நகையை மீட்டனர்.
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் ராணி. அவர் தனது உறவினர் ஒருவருக்கு கொடுக்க 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகைகளை ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலம் கட்டினார். அப்போது மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கச் சென்றார்.
கையோடு அந்த நகை பொட்டலத்தையும் எடுத்துச் சென்று மாடி சுவற்றி்ல் வைத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காகம் ஒன்று நகை பொட்டலத்தை உணவு பொட்டலம் என்று நினைத்து தூக்கிச் சென்றது.
இதைப் பார்த்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வந்தவர்கள் காகத்தை துரத்தினர். சுமார் 200 மீட்டர் வரை பறந்த காகம் ஒரு ஓட்டு வீட்டுக் கூரையில் அமர்ந்தது. உடனே துரத்திச் சென்றவர்கள் கையில் கிடைத்தவற்றால் காகத்தை விரட்டினர். இதைப் பார்த்த அந்த காகம் பொட்டலத்தை போட்டுவிட்டு இடத்தை காலி செய்தது. அவர்கள் பொட்டலத்தை எடுத்து தமிழ் ராணியிடம் கொடுத்தனர்.