பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று மஞ்சுளா, இன்று காளியம்மாள் பலி: பலி எண்ணிக்கை 4க உயர்வு
மதுரை: மதுரையைச் சேர்ந்த காளியம்மாள் பன்றிக்காய்ச்சலால் இன்று இறந்தார். இதையடுத்து தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 4க உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்களால் தான் மீண்டும் தமிழகத்திற்குள் பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. சென்னையில் 35 பேர், கோவையில் 18 பேர், திருப்பூரில் 15 பேர், கடலூர், புதுக்கோட்டையில் தலா 3 பேர், திருவள்ளூர், கரூரில் தலா 2 பேர், விழுப்புரம், மதுரை, ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா(35) நேற்று இறந்தார். கடந்த 20ம் தேதி பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மஞ்சுளாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை மோசமானதையடுத்து நேற்று மாலை அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மஞ்சுளாவின் கணவர் சிவா. அவர் முட்டுக்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர்களுக்கு முத்துச்செல்வன் (11), கலைச்செல்வன் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மதுரையில் காளியம்மாள்(55) என்பவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். மதுரை தெற்கு வெளிவீதியைச் சேர்ந்தவர் சுருளிமுத்து. அவரது மனைவி காளியம்மாளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொண்டை வலி, இருமல், காய்ச்சல் இருந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகாததால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர்.
பன்றிக்காய்ச்சல் முற்றிய நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இன்று காலை அவர் இறந்தார். காளியம்மாள் கடந்த மாதம் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தபோது தான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது. இந்நிலையில் காளியம்மாள் வசித்த தெருவில் உள்ளவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதா என்று மாநகராட்சி நகர் நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர்கள் குழு வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தியது. அப்போது தனலட்சுமி என்ற பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி தான் முதன்முதலாக பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். அவரைத் தொடர்ந்து விழுப்புரம் மாணவி நிவேதா, நேற்று மஞ்சுளா, இன்று காளியம்மாள் ஆகியோர் பலியாகினர். இதையடுத்து தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4க உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications