தர்மபுரி மாவட்டத்தில் நில அதிர்வு: தெருவில் இரவை கழித்த மக்கள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு 11.30 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் இரவுப் பொழுதை தெருக்ககளில் கழித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு 11.30 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு குழந்தை, குட்டிகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். உடனே நில அதிர்வு குறித்து மக்கள் தங்கள் உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
வீட்டில் நன்றாகத் தூங்கியவர்களுக்கு நில அதிர்வு ஏற்பட்டது தெரியவில்லை. ஆனால் அதிர்வை உணர்ந்தவர்கள் மீண்டும் வீட்டிற்குள் செல்ல பயந்து வெகுநேரம் தெருக்களிலேயே நின்று கொண்டிருந்தனர். குமாரசாமிப்பட்டி, காந்திநகர், நெடுமாறன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் நீண்ட நேரம் தெருக்களிலேயே நின்று கொண்டிருந்தனர். தர்மபுரியில் உணரப்பட்ட நில அதிர்வு சேலம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியிருந்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்றிரவு 11.28 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக பதிவாகியிருக்கிறது. அந்த நேரத்தில் வெடிவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து சென்னை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications