இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அன்னா குழு போட்டி?

ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் தேர்தலில் எல்லாம் போட்டியிட மாட்டோம் ஆனால் நல்ல வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அன்னா குழுவினர் ஆலோசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் எங்களை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் என்று அன்னா குழு உறுப்பினரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளோம். தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதை மக்களில் எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை என்று மற்றொரு உறுப்பினரான டாக்டர் விஷ்வாஸ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று அன்னா குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் பாதிக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலின்போது நேர்மையான மற்றும் லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்குமாறு அன்னா குழு செய்த பிரச்சாரம் வீணானது. அதனால் தான் தாங்களே தேர்தலில் போட்டியிட்டால் என்ன என்று அந்த குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications