பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழலா? விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக விமானப் படையில் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றுக்குப் பதிலாக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ. 3,546 மதிப்பில் AW-101 ரகத்தைச் சேர்ந்த 12 ஹெலிகாப்டர்களை வாங்க 2010-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.
ஆனால் இந்த கொள்முதலுக்காக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.350 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக இத்தாலி அரசாங்கம் விசாரணை நடத்தி வந்தது.
மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி அரசு விசாரணை நடத்தி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதுபற்றி அறிக்கை அனுப்பி வைக்குமாறு இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, இந்திய தூதரகம் அனுப்பி வைத்த அறிக்கையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் பொதுவான நிதி முறைகேடுகள் பற்றித்தான் இத்தாலி அரசு முதல்கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும், இந்தியா தொடர்பான பணபரிவர்த்தனை பற்றி எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த குறிப்பிட்ட ஹெலிகாப்டர் ஊழல் பற்றி இத்தாலி விசாரணை நடத்துமா? என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
ஏதேனும் தவறு நடந்திருப்பது தெரிய வந்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications