பின்லேடன் உடல் சூரத் அருகே அரபிக் கடலில் புதைக்கப்பட்டதா?
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பின்லேடன் தமது குடும்பத்தினருடன் பதுங்கி இருந்தார். இதை உறுதி செய்து கொண்ட அமெரிக்காவின் நேவிசீல் ராணுவப் பிரிவினர் அதிரடித் தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் உடலை கடலில் புதைத்துவிட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட ஓராணயொட்டி பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட படங்களை அமெரிக்கா வெளியிட்டது. ஆனால் எந்தக் கடல் பகுதியில் அந்த உடல் புதைக்கப்பட்டது என்ற தகவலை வெளியிடவில்லை. இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த கடலியல் ஆராய்ச்சியாளர் பில் வார்ர்ரென் என்பவர் இந்தியாவின் சூரத் நகர் அருகே 320 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில்தான் ஒசாமா பின்லேடனின் உடல் புதைக்கப்பட்டது என்ற பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அமெரிக்கா வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் அரபிக் கடல் பகுதியில்தான் பின்லேடன் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஒசாமா உடல் வைக்கப்பட்ட பெட்டியை எப்படியாவது நான் மீட்க உள்ளேன். இதற்கான பணியை ஜூன் 1-ந் தேதி தொடங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் ஒரு அமெரிக்கராக இந்தப் பணியை தாம் செய்யப் போவதாகவும் பில்வார்ரென் தெரிவித்துள்ளார்.