லீவு கேட்ட ஆசிரியையை தரக்குறைவாக திட்டிய அதிகாரி.. ஆசிரியர்கள் கொந்தளிப்பு
தேனி: உத்தமபாளையத்தில் உடல் நலம் பாதித்த மகளைப் பார்க்க விடுப்பு கேட்ட ஆசிரியையை மாவட்டக் கல்வி அதிகாரி தரக்குறைவாக திட்டியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள விகாசா வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி விடைத்தாள் திருத்தி வருகிறார். ராணுவத்தில் இருந்த அவரது கணவர் கார்கில் போரில் பலியாகிவிட்டார். மகள் மகேஸ்வரி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவருக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மகளைப் பார்க்க ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு விஜயலட்சுமி மாவட்டக் கல்வி அதிகாரி முருகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் விடுப்பு தராமல் இழுத்தடித்துள்ளார். பின்னர் விஜயலட்சுமியிடம் மகளைப் பார்க்க உங்கள் கணவரை அனுப்பி வைக்க வேண்டியது தானே என்று கூறி தரக்குறைவாகத் திட்டியிய பிறகு விடுப்பு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த பிற ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்திவிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணி 2 மணி நேரம் பாதித்தது. போலீசார் வந்து சமரசம் செய்துவைத்த பிறகே அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.












Click it and Unblock the Notifications