ஹில்லாரிக்கு இட்லி, வடை, தோசை, முருங்கைக்காய் சாம்பார் கொடுத்து உபசரிப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் சந்திப்பு சற்று நேரத்திற்கு முன்பு தான் துவங்கியது.
காலை உணவாக தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. முந்திரி பருப்பு போட்ட ரவா உப்புமா, மெது வடை, பொடி, நெய், கேசரி பாத், ஊத்தாப்பம், தோசை, இட்லி, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளி சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர அவர்களுக்கு மசாலா டீ, தென்னிந்திய காபி உள்ளிட்ட பாரம்பரியமான உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
முன்பெல்லால் டெல்லிக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வட இந்திய உணவு வகைகளைத்தான் வகை வகையாக செய்து தருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தென்னிந்திய உணவுகளையும் போட்டுக் கலக்குகிறார்கள்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் வர்த்தகம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.