தேமுதிக எம்.எல்.ஏக்களை குறிவைத்து வளைக்க அதிமுக மும்முரம்
மதுரை: தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரம் பேச ஆளும் அதிமுக தலைமை சிக்னல் கொடுத்துவிட்டதால்தான் எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் சுற்றுப் பயணம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் 29 இடங்களை தேமுதிக வென்றது. ஆனால் கூட்டணி முறிந்து போனதால் தேமுதிக எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.
பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். நீதிமன்றத்தை நாடியும் அவருக்குப் பிரயோஜனமில்லாமல் போனது. இதனால் தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன் தொகுதி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனையை பேச அனுமதி மறுக்கிறார்கள் என்று போகும் இடமெல்லாம் அதிமுகவை வறுத்தெடுத்து வருகிறார்.
எம்.எல்.ஏக்களை கூடவே வைத்துக் கொண்டு விஜயகாந்த் சுற்றுப் பயணம் செய்வதின் பின்னணியில் ஒருதகவல் உலா வருகிறது. திமுகவைவிட ஓவராக குடைச்சல் கொடுத்து வரும் தேமுதிகவை அடக்க் அந்த கட்சி எம்.எல்.ஏக்களை கொண்டு அதிமுக ஆதரவு அணி ஒன்றை உருவாக்குவது அல்லது அந்தக் கட்சி எம்.எல்.ஏக்களை அதிமுகவில் ஐக்கியமாக்குவது என்று அதிமுக தலைமை முடிவெடுத்துவிட்டதாம்.
இப்படி அதிமுக கணக்குப் போட்டு உடைத்தால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து இமேஜ் டவுனாகிப் போகும் தேமுதிகவுக்கு. திமுகவே எதிர்க்கட்சியாக உருவாகிவிடும். இந்தத் தகவல் கேப்டனுக்குப் போனதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு சுற்றுப் பயணம் செய்து வருகிறாராம்.