தஞ்சையில் உறவினர்கள் இல்ல விழா- வருவாரா சசிகலா?

ஜெயலலிதாவும், சசிகலாவும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தபோது, சசிகலா குடும்பத்தினர் பலர் மீது நில அபரிப்பு, மிரட்டல், மோசடி புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குகள் பாய்ந்தன. இவர்களில் நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது ஜெயலலிதாவும், சசிகலாவும் சமரசமாகி சேர்ந்து விட்டனர். இருப்பினும் குடும்பத்தினர் மீதான போலீஸ் நடவடிக்கை இன்னும் முழுமையாக குறையவில்லை.
இந்த நிலையில், மே 23 ம் தேதி நடராஜன் தம்பி ராமச்சந்திரனின் மகன் திருமணமும், மே 25 ம் தேதி நடராஜனின் தங்கை மகள் திருமணமும், நடராஜனுக்குச் சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இது வரை சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் இல்ல அனைத்து சுப நிகழச்சிகளிலும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு என்ற வாசகம் இடம் பெற்றுத் தான் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டது.
ஆனால், இம்முறை, இந்த இரு இல்ல திருமணங்களின் அழைப்பிதழ்களில் சசிகலா பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. வழக்கமாக இடம் பெறும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு என்ற வாசகமோ, முதல்வர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை.
இதனால் இந்தத் திருமண விழாக்களுக்கு சசிகலா வருவாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அவர் இல்லாமல் நடராஜன் குடும்பத் திருமணங்கள் எதுவும் நடந்ததில்லை. ஆனால் இப்போது பெரும் இக்கட்டான நிலையில் இந்த இரு திருமணங்களும் நடைபெறவுள்ளன.
ஜெயலலிதாவின் பெயரோ, படமோ இடம் பெறாமல் பத்திரிக்கை அடித்திருப்பதால் நிச்சயம் சசிசகலா வர மாட்டார் என்று கூறப்படுகிறது. இப்போதுதான் கடும் சிரமப்பட்டு ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளார் சசிகலா. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பெயர் போடாத கல்யாணத்திற்கு அவர் எப்படிப் போவார் என்று ஒரு தரப்பு கூறுகிறது.
அதேசமயம், கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ மணமக்களை தனியாக சந்தித்து வாழ்த்துவார் என்று பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications