சென்னையில் போலீஸ் பிடியில் இருந்து நழுவிய பெண் மாவோயிஸ்ட் ஆந்திராவில் தஞ்சம்!

2007ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள முருகமலை காட்டுப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில், வேல்முருகன் உள்ளிட்ட 3 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். 8 பேர் தப்பியோடிவிட்டனர். அதில், ஒருவரான விவேக் (45) சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் மாவோயிஸ்டு அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். இவருடன் இருந்த இவரது மனைவுயும் நக்ஸலுமான பத்மா தப்பிவிட்டார்.
2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த 30 மாவோயிஸ்டுகளை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில், 19 பேரை போலீசார் கைது செய்தனர். 11 பேர் தப்பியோடிவிட்டனர். பின்னர், 6 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இதில், தப்பியோடிய பெண் மாவோயிஸ்டுகளில் பத்மாவும் (36) ஒருவர்.
பல ஆண்டுகளாக தேடப்பட்ட விவேக், மனைவி பத்மாவுடன் சென்னை அண்ணாநகர் அருகே ஷெனாய் நகரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு வந்திருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் திருமண மண்டபத்திற்கு வெளியே போலீசார் மாறுவேடத்தில் நின்று, விவேக்கை சுற்றிவளைத்து கைது செய்தனர். உடனடியாக, அவரை பெரியகுளம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், தனது மனைவி பத்மாவுடன் திருமண விழாவுக்கு வந்ததாக போலீசாரிடம் விவேக் கூறினார். அதனைத் தொடர்ந்து, திருமண வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போலீசார் ஆராய்ந்தனர். மணமக்களுடன் விவேக் மற்றும் அவரது மனைவி பத்மா எடுத்துக்கொண்ட புகைப்படமும் கிடைத்தது.
புகைப்படத்தை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்த பத்மா ஏற்கனவே தேடப்படும் பெண் மாவோயிஸ்டு தீவிரவாதி ஆவார். மீண்டும் போலீசார் மண்டபத்துக்குள் செல்வதற்குள் பத்மா தப்பியோடிவிட்டார்.
மாவோயிஸ்டு அமைப்பை பொறுத்தவரை, அதில் உள்ள ஆண் - பெண் உறுப்பினர்கள் விருப்பம் இருந்தால் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம். வெளியாட்கள் யாரையும் திருமணம் செய்வது கிடையாது. மேலும், குழந்தையும் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற விதி உள்ளது. அதன்படிதான், விவேக்கும், பத்மாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
போலீஸ் பிடியில் இருந்து நழுவிய பத்மா ஆந்திராவுக்குத் தப்பியோடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பத்மா துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்தவர் என்பதால், துப்பாக்கி முனையில் அவரை பிடிக்க 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
அதில், ஒரு போலீஸ் படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர். மற்ற 2 போலீஸ் படையினர் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் பத்மா பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவேக், தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications