அமைச்சர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய நாளே தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டு அவர் ஏற்கனவே பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டார். இந்நிலையில் அவர் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முத்துமாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை வந்த அமைச்சர்கள் குழு:
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்காக 32 அமைச்சர்கள் அடங்கிய 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, சுப்பிரமணி, சம்பத், வளர்மதி, பச்சைமால், ராஜேந்திர பாலாஜி, மூர்த்தி, காமராஜ், சுந்தர்ராஜ், விஜய், முகமது ஜான், முக்கூர் சுப்பிரமணியன், செல்லப்பாண்டியன், ஆனந்தன், ஜெயபால், செந்தில் பாலாஜி, வைத்திலிங்கம், தங்கமணி, சிவபதி மற்றும் பி.எச்.பாண்டியன், குமார் எம்.பி., அறந்தாங்கி ராஜநாயகம் ஆகியோர் இன்று காலை புதுக்கோட்டை வந்துள்ளனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தியம் ஹோட்டலில் அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications