ஆளுநர் ரோசைய்யாவை குறிவைக்கும் நக்சல்கள்: உளவுத் துறை எச்சரிக்கை

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர முதல்வராக இருந்த ராகசேகர ரெட்டி விமான விபத்தில் பலியானதை அடுத்து ரோசைய்யா ஆந்திர முதல்வரானார். ஆனால் அவர் உடல் நலக்குறைவு காரணமாக 24-11-2010 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆந்திர முதல்வராக இருந்த போது அம்மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளை அடக்கி, ஒடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் நக்சலைட்டுகள் அவர் மீது ஆத்திம் அடைந்தனர்.
இதையடுத்து 26-8-2011 அன்று ரோசைய்யா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு சென்னை வந்துவிட்டார். அவர் தமிழகத்திற்கு வந்த பிறகும் கூட நக்சலைட்டுகளுக்கு அவர் மீதான ஆத்திரம் தீரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரோசைய்யா உயிருக்கு ஆந்திர மாநில நக்சலைட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து ரோசைய்யாவின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக போலீசாரும் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் இனி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவிருக்கிறது.
தற்போது ரோசைய்யாவுக்கு ஆளுநர் என்ற முறையில் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் அவருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications