சேலத்தில் அடிதடி-யாக மாறிய திமுக ஆர்பாட்டம் - தொண்டர்கள் கதறி ஓட்டம்
சேலம்: சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் கோஷ்டியினருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சேலத்தில் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அண்ணா சிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை திறந்த வேனில் ஊர்வலமாக வந்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது தபால் நிலையம் எதிரில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், நீங்கள் எல்லாம் பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் அவர்கள் அடிப்படியே நின்றனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகம், பெரியவங்க சொல்வதை கொஞ்சம் கேளுங்க என்றார்.
இதனையடுத்து வீரபாண்டி ஆதரவாளர்களுக்கும், ராஜேந்திரன் கோஷ்டியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலை எதிர்பாராத திமுக தொண்டர்கள் சிதறி ஓடினர். பயங்கர ஆயுதங்களுடன் மோத தயாரானவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சம்பவ இடத்தில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே வீரபாண்டி ஆறுமுகமும், ராஜேந்திரனும் கீரியும் பாம்புமாக இருந்தனர். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிட்டனர். இதன் வெளிப்பாடு தான் தற்போது இந்த மோதல் என்று திமுக தரப்பில் கூறப்படுகின்றது.
போலீசார், பத்திரிக்கையாளர்கள் முன்பு திமுகவினர் அடித்துக் கொண்டது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.