தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசாவின் பிறந்தநாள் வாழ்த்து

இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.
கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.
அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.
கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.
ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.
இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications