15 நீதிமன்றக் காவலில் ஐ.பெரியசாமி: திருச்சி சிறையில் அடைப்பு
அய்யம்பாளையத்தில் அனுமதியின்றி குவாரி நடத்தியதாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் தொடர்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது ஐ.பெரியசாமி வீட்டில் இல்லை.
தன்னை போலீசார் தேடி வந்ததது பற்றி அறிந்த அவர் இன்று காலை திண்டுக்கல் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றார். உடனே போலீசார் அவரை விசாரணைக்காக கூம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியாக அவரை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி அனுராதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.