டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் இன்று முதல் மாநிலம் தழுவிய ஸ்டிரைக்
சென்னை: டாக்டர்கள் மீது தொடரும் தாக்குதல்களை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களால் கடந்த வாரத்தில் மட்டும் டாக்டர்கள் 2 முறை தாக்கப்பட்டனர். இதனால் அம்மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து டாக்டர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பயிற்சி டாக்டர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவியரும் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள்.
இது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பயிற்சி டாக்டர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் டாக்டர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து பேசினர்.
பின்னர் இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவர் சங்க தலைவர் ஸ்ரீதர் கூறுகையில்,
சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை. இனியாவது டாக்டர்கள் பயமின்றி பணிபுரிய தமிழக அரசும், மருத்துவமனை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களை கூட்டமாக உள்ளே வர அனுமதிக்கக் கூடாது.
டாக்டர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை இன்று முதல் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஆதரித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்.
பயிற்சி டாக்டர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.