மக்கள் பயனடையும் வகையில் எதையுமே செய்யாத அதிமுக அரசு: ஜி.ராமகிருஷ்ணன் புகார்
குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மாநில அரசுக்கு வரும் வரி வருவாயில் 10 விழுக்காட்டை மட்டுமே உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்குகிறார்கள். கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 30 முதல் 40 விழுக்காடு வரை உள்ளாட்சி மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்குகிறார்கள். மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 30 விழுக்காடு நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பஞ்சாயத்து தலைவர்களை நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்.
உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளோ, அலுவலர்களோ முறைகேட்டில் ஈடுபட்டால் விசாரணை நடத்த ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜுலை மாதத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அ.தி.மு.க. அரசு இதுவரை மக்களுக்கு பயன்படும் வகையில் எதுவும் செய்யவில்லை. பால் விலை, பஸ் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி, பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாததால், நாங்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறோம்.