எலே சிங்கு உனக்கே இது நியாயமாலே! ரியாத்தில் மாசம் 10 லட்சம் சம்பளம்.. ஆனாலும் வாழ்க்கை போரடிக்குதாம்
ரியாத்: வெளிநாட்டில் நல்ல வேலை, அதிக சம்பளம், மாதந்தோறும் பெரிய அளவில் சேமிப்பு, இந்தியாவில் பல கோடி சொத்துகள் வாங்குவது போன்றவை பலருக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியமாகவே இருக்கும், ஆனால் இவ்வளவு வசதிகள் இருந்தும் வாழ்க்கை சலிப்பாக மாறிவிட்டதாக ரியாத்தில் வேலை பார்க்கும் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர் புலம்பிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரத்தில் பணியாற்றும் ஒரு இந்திய மென்பொருள் பொறியாளர் பற்றி தான் ஆரம்பத்தில் இந்த விவாதம் தொடங்கியது. அவரைப் பற்றி அபிஷேக் சிங் என்ற நபர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த தகவல்களே இதற்கெல்லாம் காரணம்.

அபிஷேக் சிங் கூறிய தகவலின்படி, அந்த பொறியாளர் மாதம் சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். செலவுகளை எல்லாம் செய்த பிறகும் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்தியாவில் பல இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கி வைத்திருக்கிறார்.மேலும், தங்கம், பங்குச் சந்தை என தொடர்ந்து முதலீடு செய்து சொத்துகளை அதிகரித்து வருகிறார்.
பொதுவாக இத்தகைய வருமானமும் சொத்துகளும் இருந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் அந்த பொறியாளர் தனது வாழ்க்கை மிகவும் ஒரே மாதிரியாக போரடிப்பதாக கூறியுள்ளார். தினமும் வேலைக்கு செல்வது, உடற்பயிற்சி செய்வது, மீண்டும் வீடு திரும்பி ஓய்வெடுப்பது என்று ஒரே மாதிரி தான் வாழ்க்கை மாறிவிட்டதாக அவர் புலம்பியிருக்கிறார்.
"வேலை - உடற்பயிற்சி - தூக்கம்" என்ற ஒரே மாதிரியான சுழற்சியில் வாழ்க்கை சுழலில் சிக்கிக் கொண்டது போல உணர்கிறேன் என்றும், இதனால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கருத்து தான் தற்போது இந்த விவாதத்துக்கு காரணம்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியவுடன், பலரும் தங்களது கருத்துகளை பகிரத் தொடங்கினர். சிலர், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணமும் சொத்துகளும் இருந்தாலும் மனநிறைவு இல்லாமல் போகலாம் என்றும், ஒரே மாதிரியான வாழ்க்கை முறை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் சலிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும் என்ற கருத்து சொல்லி வருகின்றனர்.
மற்றொரு தரப்பு மக்கள், இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் நிலையில் வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது என்று கூறுவது சரியா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். சிலர், வெளிநாட்டில் செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் இவ்வளவு சேமிப்பு செய்வது எளிதானது அல்ல என்றும் சொல்கின்றனர். இந்தியாவில் மட்டும் சொத்துகள் வாங்குவதற்குப் பதிலாக, பல நாடுகளில் முதலீடு செய்திருந்தால் இன்னும் அதிகலாபம் கிடைத்திருக்கும் என்றும் சிலர் சொல்லியுள்ளனர்.
அபிஷேக் சிங் சொன்ன நபரின் மூலம் பணம் மற்றும் சொத்து மட்டும் வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை தர முடியுமா என்ற கேள்வியை மீண்டும் எழுந்துள்ளது. அதிக வருமானம் இருந்தாலும், வாழ்க்கையில் புதிய அனுபவங்கள், உறவுகள் மற்றும் மனநிறைவு போன்றவை இல்லாவிட்டால் சலிப்பு ஏற்படலாம் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இன்றைய சூழலில் அதிக சம்பளம் பெறும் ஐடி துறையினரிடையே இதுபோன்ற உணர்வுகள் அதிகரித்து வருவதாகவும், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை பேணுவது மிகவும் முக்கியம் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.














Click it and Unblock the Notifications