குஜராத்தில் 100% முஸ்லீம்கள் உள்ள வார்டில்.. சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற இந்து பெண்!
அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கோத்ரா நகராட்சியில் உள்ள ஒரு வார்டில் இந்து பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதில் கவனம் பெறுவது என்னவென்றால், 100 சதவீதம் முஸ்லீம்கள் மட்டுமே உள்ள அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட அபேக்ஷபென் நைனேஷ்பாய் சோனி என்ற அந்த பெண் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள் மற்றும் 34 மாவட்டப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. அங்குக் காங்கிரஸ் படுமோசமாக தோற்றுள்ளது.

கவனம் பெற்ற வேட்பாளர்
கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியும் இப்போது பெரிதாக வெற்றியை பதிவு செய்யாமல் தோற்று போயுள்ளது. சூரத், ராஜ்கோட், வதோதரா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 15 நகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க கோத்ரா வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வெற்றி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கோத்ரா நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மொத்த குஜராத்திலும் கவனம் பெற்றுள்ளார். ஏனெனில் முழுக்க முழுக்க முஸ்லீம்கள் மட்டுமே வசிக்க கூடிய இந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட இந்து பெண்ணான அபேக்ஷபென் நைனேஷ்பாய் சோனி, உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்று வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வார்டில் ஓட்டு கூட கிடையாது..
இத்தனைக்கும் சோனிக்கு அந்த வார்டில் ஓட்டு கூட இல்லை. வெளியூரை சேர்ந்தவராக இருந்தாலும் தினமும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டு, அதற்கு தீர்வு காண்பது, வாக்களர்களிடம் நேரடி பரிட்சயம் ஆகியவற்றை சோனி வைத்து இருந்து இருக்கிறார். பிளவுபடுத்தும் அரசியலை விட உள்ளூர் மற்றும் அன்றாடப் பிரச்சினைகளையே மையமாகக் கொண்ட பிரச்சாரமே தனது வெற்றிக்குக் காரணம் என்று சோனி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஆய்வாளர்கள் இது பற்றி கூறுகையில், "உள்ளூர் நிர்வாகத்திற்கு தகுதியான வேட்பாளராக கருதியதால், பாரம்பரிய மத மற்றும் சாதி அடிப்படையிலான வாக்கு என்பதை தாண்டி, முஸ்லிம் வாக்காளர்கள் அளித்த உறுதியான ஆதரவினாலேயே இந்து பெண் வேட்பாளரின் வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவு கோத்ராவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு
ஏனெனில், இது சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் அரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 100 சதவீதம் முஸ்லிம் மக்கள் வசிக்கும் வார்டில், குறிப்பிடத்தக்க பெரும்பான்மையுடன் ஒரு இந்து பெண்ணை தேர்ந்தெடுத்து இருப்பது, சமூக பாகுபாடுகளை விட தனிநபர் தகுதி மற்றும் உள்ளூர் நம்பிக்கைக்கே முன்னுரிமையை வாக்காளர்கள் அளிப்பார்கள் என்ற தெளிவான பார்வையை கோத்ரா வாக்காளர்கள் வழங்கியுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அகமதாபாத்தில் மட்டும் 192 இடங்களில் 146 இடங்களில் பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சூரத்தில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ்கோட் மற்றும் வதோதராவிலும் பாஜகவின் ஆதிக்கமே காணப்பட்டது. பாஜக 65 இடங்களில் அங்கு வென்றுள்ளது. காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொட முடியாமல் தடுமாறும் நிலையே நீடித்தது.












Click it and Unblock the Notifications