கேரளாவில் பிடிபட்ட இலங்கை அகதிகள் 123 பேர் நெல்லை வருகை

கேரள மாநிலம் கொல்லம் அருகே சக்திகுளக்கரை கடல் பகுதியில் கடந்த 3ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட இருந்த 150 இலங்கை அகதிகளை கொல்லம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாமில் துன்பங்களை அனுபவிப்பததால் அங்கிருந்து தப்பி வெளிநாடு செல்ல முயன்றதாக தெரிவித்தனர். இவர்களில் 27 பேர் பாஸ்போர்ட் உள்ளிட்ட எவ்வித ஆவணமும் இல்லாமல் இலங்கையில் இருந்து வந்ததாக தெரிவித்தனர். எனவே அவர்களில் 19 பேர் கொல்லம் கிளை சிறையிலும், 2 பேர் மகளிர் சிறையிலும், 6 சிறுவர்கள் இளம் சிறார் காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 123 அகதிகளும் நேற்று போலீஸ் வேன் மூலம் கொல்லத்திலிருந்து நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 87 ஆண்கள், 17 பெண்கள், 19 குழந்தைகள் அடக்கம். பாளை சிவன் கோயில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் இலங்கை அகதிகள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. பி்ன்னர் கொல்லம் இன்ஸ்பெக்டர் கம்ரூதின் 123 அகதிகளையும் பாளை தாசில்தார் வெள்ளையன், அகதிகள் மறுவாழ்வு தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தார்.
ராயலூர், சி்ந்தாதகிரி பேட்டை, காட்டுமன்னார் கோவில், மானாமதுரை, நாகர்கோவில் பெருமாள்புரம், பரமத்தி, புழல் உள்ளிட்ட 17 முகாம்களில் இருந்து அகதிகள் தப்பி கேரள சென்றது தெரிய வந்தது. அவர்களை அந்தந்த முகாம்களுககு திருப்பி அனுப்ப வருவாய் துறையினர் ஏற்பாடுகள் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications