குற்றால அருவிகளை மூடத்துடிக்கும் வனத்துறையினர்?
குற்றாலம்: குற்றாலத்தில் உள்ள அருவிகளை வனத்துறையினர் மூட நினைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும வந்து செல்லும் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக குற்றாலம் திகழ்கிறது. கடவுள் தந்த வரப்பிரசாதமான குற்றாலத்திற்கு பெருமை சேர்ப்பது ஆர்பரித்து கொட்டும் அருவிகள் தான். வனத்துறையினர் சட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு அருவியாக மூடி வருவது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தோட்ட கலைத்துறை பராமரிப்பில் இருந்த பழந்தோட்ட அருவியில் அனுமதி சீட்டு வழங்குவதில் தலையிட்டு பின்னர் அந்த அருவியை மூடிய பிறகுதான் வனத்துறையினர் திருப்தியடைந்தனர். பெண்கள், சிறுவர்கள் குளிப்பதற்கு பெயர் பெற்ற சிற்றருவி வனத்துறை பகுதியில் உள்ளது என்று கூறி அங்கும் பிரச்சனை செய்தனர். பின்னர் அருவி பேரூராட்சி நிர்வாகத்துக்கு என்று முடிவானதும் அருவிக்கு செல்லும் பாதை வனத்துறையினருக்கு சொந்தமானது என்று கூறி பாதையை மூடிவிட்டனர். இதனால் வாகனங்கள் அருவி பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனையடுத்து செண்பகாதேவி அருவிக்கு குளிக்க செல்வதால் வனப்பகுதி மாசுபடுகி்றது என கூறி அந்த பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கூட கெடுபிடிகளை விதித்தனர்.
பழைய குற்றாலத்திற்கு ஆயிரப்பேரி ஊராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் நிலம் உள்ளது. ஆனால் இந்த நிலத்திற்கு செல்லும் பாதை வனத்துறையினர் வசம் உளளது என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கார் பார்க்கிங் பகுதியை சீரமைக்க விடாமல் தடுத்துவிட்டனர். இவ்வாறு பல நூறு ஆண்டு காலம் பொதுமக்கள் அனுபவித்து வந்த பல விஷயங்களை வனத்துறையினர் சட்டங்களின் பெயரால் தடுத்து வருகின்றனர். தற்போது ஐந்தருவியிலும் வனத்துறையினர் தலையிட்டு ஐந்தருவி கார் பார்க்கிங் பகுதி மற்றும் அருவி பகுதி வனத்துறை பகுதியில் இருப்பதாக கூறி பிரச்சனையை கிளப்பிவிட்டனர்.
இதையடுத்து தற்போது அந்த பகுதியில் சர்வே பணி நடந்து வருகிறது. இதனால் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் பாதை சீர்குலைக்கப்பட்டு கம்பியும், கல்லும், உடைநத் கான்கிரீட் தலமுமாக காட்சியளிக்கிறது. வனத்துறையின் செயல்பாடு சுற்றுலாப் பயணிகளையும், அப்பகுதி மக்களையும் வெறுப்படைய வைத்துள்ளது. வனத்துறையின் தலையீட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications