அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு: வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும் கைது
சேலம் : சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் தி.மு.கமுன்னாள் அமைச்சர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் சோலை குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்..
சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி கந்தசாமியின் மகனும், முன்னாள் ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சுரேஷ்குமாரின் தம்பியுமான சோலை குமாரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சீலநாயக்கன்பட்டியில் ஒரு வீட்டில் சோலைக் குமார் தங்கி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
பின்பு அவரை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் மூலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதே வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.