கர்நாடகத்திலிருந்து மதுரைக்குத் தப்பினார் நித்தியானந்தா!
கடந்த 7-ந் தேதி நிருபர்களுக்கு தனது பிடதி ஆசிரமத்தில் வைத்து பேட்டி கொடுத்தார் நித்தியானந்தா. அப்போது நித்தியானந்தா மீது பாலியல் புகார் கூறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் குறித்து கேள்வி எழுப்பினார் சுவர்ணா டிவி செய்தியாளர். அதற்கு நித்தியானந்தா பதிலளித்தார்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. சம்பந்தப்பட்ட செய்தியாளரை நித்தியானந்தா வெளியேற்றுமாறு கூறியதாகவும், இதையடுத்து நித்தியானந்தாவி்ன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி செய்தியாளரை வெளியேற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கி்ன்றன.
இதையடுத்து கன்னட நவநிர்மான் வேதிகே என்ற அமைப்பு நித்தியானந்தா மடம் முன்பு போராட்டத்தில் குதித்தது. அப்போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இந்தத் தகவல் கர்நாடகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகள் கொதித்தெழுந்து நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. கலவரம் ஏற்படும் சூழல் அங்கு காணப்படுகிறது. இதையடுத்து நித்தியானந்தா மடம் முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
செய்தியாளரைத் தாக்கியது தொடர்பாக மொத்தம் 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நடிகை ராகசுதா உள்பட 14 பேரை போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவர்களில் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
7 பேர் கைது செய்யப்பட்டனர். நித்தியானந்தா உள்பட எட்டு பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே நித்தியானந்தா மதுரைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. மதுரை ஆதீன மடத்தில் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இந்த நிலையில் நித்தியானந்தாவை தீவிரமாக தேடி வருவதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமநகர காவல்துறை எஸ்.பி அனுபம் அகர்வால் கூறியுள்ளார்.