பஞ்சாப்பில் மீண்டும் உயிர்பெறுகிறதா பிரிவினைவாதம்?:கண்காணிப்பில் உள்துறை அமைச்சகம்!
டெல்லி: 1980களில் இந்தியாவை உலுக்கி எடுத்த பஞ்சாப் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்கிவிடுமோ என்று தீவிரமான கண்காணிப்பில் இறங்கியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
பஞ்சாப் தனிநாடு கோரி 1980களில் தொடக்கத்தில் ஆயுதமேந்திய சீக்கிய அமைப்புகள் களத்தில் இருந்தன. சீக்கியர்களின் அமிர்தரசஸ் பொற்கோவிலே பஞ்சாப் பிரிவினைவாத இயக்கங்களுக்கு புகலிடமாகவும் இருந்தது. பிந்தரன்வாலே தலைமையிலான இக்கிளர்ச்சியை ஒடுக்கும் வகையில் சீக்கியர்களின் புனித கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. பிரிவினைவாத இயக்கத்தினருக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முடிவில் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரிவினைவாதிகள் உயிரிழந்தனர்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது நிகழ்த்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆப்பரேசன் ப்ளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்டது. 1984-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி நடைபெற்ற இந்த நடவடிக்கையில் மொத்தம் 220 பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த ப்ளூ ஸ்டார் நடவடிக்கைதான் சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா சுட்டுக் கொல்லப்படவும் நேர்ந்தது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு பஞ்சாப்பில் பிரிவினைவாதம் மெளனித்துப் போனது.
இந்நிலையில் பஞ்சாப்பில் ப்ளூ ஸ்டார் ஆப்பரேஷனில் உயிரிழந்தோரின் 28-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் உயிர்நீத்தோருக்கான நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் கடந்த 6-ந் தேதி பஞ்சாப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீக்கிய மத தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது இந்தியாவுக்கு எதிராகவும் பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையிலும் முழக்கங்கள் எழப்பப்பட்டன. இது மத்திய உள்துறை அமைச்சகத்தை தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட பஞ்சாப் பிரிவினைவாத இயக்கமான பப்பர் கல்ஷாவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பினர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் மத்திய உள்துறைக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் மீண்டும் பஞ்சாப் பிரிவினைவாதம் தலைதூக்கிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் "பற்றி எரிகிறது பஞ்சாப்" என்ற தலைப்பு செய்திகள் இடம்பெறக் கூடாது என்று கண்காணித்து வருகிறது உள்துறை அமைச்சகம்!












Click it and Unblock the Notifications