இடைத்தேர்தலில் திமுகவின் பார்முலாவை பயன்படுத்தும் அதிமுக: வைகோ குற்றச்சாட்டு

புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடியில் நடந்த ஒரு திருமண விழா ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் தஞ்சையில் இருந்து ஆலங்குடி வருகையில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சோதனைச்சாவடியில் கட்சி கொடியுடன் வந்த எனது காரை நிறுத்தி சோதனை செய்தனர். மக்கள் பிழைப்புக்காக அன்றாடம் கொண்டு செல்லும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக் கணக்கான ரூபாயை தொகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
புதுக்கோட்டை தொகுதி பணத்தாலும், பிரச்சாரத்தாலும் நிறைந்து காணப்படுகிறது. இடைத்தேர்தலில் கடந்த ஆட்சியாளர்கள் கடைபித்த அதே கலாச்சாரத்தை தான் தற்போதைய ஆட்சியாளர்களும் கடைபிடிக்கிறார்கள்.
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகமே குரல் கொடுத்து வருகிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை உலகத் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உயிரை பறிப்பவன் சிங்களன். உயிரை கொடுப்பவன் தமிழன்.
மேலை நாட்டு கலாச்சாரம் மற்றும் மது போதையினால் தமிழகம் சீரழிந்துவிட்டது. வசதிகள் இருந்தாலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். விவசாய வேலைகள் பற்றி முழுமையாக எனக்கு தெரியும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலுமே கிடைக்காது. அதனால் விவசாயத்தை விட்டுவிடாதீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications