கேலிச் சித்திரத்தை நீக்காவிட்டால் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டம்: சீமான்
சென்னை: மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச் சித்திரத்தை நீக்காவிட்டால் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேச கல்வி, ஆய்வு, பயிற்சிக்கழகத்தால் (நெசர்ட்) வெளியிடப்பட்டுள்ள 12-வது வகுப்பிற்கான பாடப்புத்தகத்தில் 1965-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேலிச் சித்திரம் இடம்பெறச் செய்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களை இந்தியாவின் இதர மாநில மாணவர்கள் மனதில் தவறாக காட்டுவதாக உள்ளது.
இந்தியா விடுதலைப் பெற்ற நாளில் இருந்தே இந்தியை இந்த நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்கிட வேண்டும் என்ற முயற்சி அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாகவே இன்றுவரை அது தடுக்கப்பட்டு நிற்கிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை பரப்புவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் பணி உயர்விற்கான விண்ணப்பத்தில் இந்திய ஆட்சி மொழியான இந்தியை பரப்ப நீங்கள் அளித்துள்ள பங்கு என்ன என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நெசர்ட் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேலிச் சித்திரத்தை உடனடியாக நீக்கிட வேண்டும். அதைச் செய்யாவிட்டால், மத்திய அரசுப் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications