வக்கீல்களுடன் பேச திகார் கைதிகளுக்கு தொலைபேசி வசதி: ஆ.ராசாவின் 'ஐடியா' பரிசீலனை!
டெல்லி: திகார் சிறை கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்ற முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் யோசனையை டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது.
2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் 15 மாதங்களாக இருந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீனில் வெளியே வருவதற்கு முன்பு டெல்லிக்கு அரசு்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திகார் சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கமாகத் தெரிவி்த்ததோடு கைதிகளை தங்கள் வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
ராசாவின் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு டெல்லி சட்ட அமைச்சகத்தை அம்மாநில முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
திகார் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாரத்தின் 7 நாட்களும் 5 நிமிடம் வரை பேச அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் அழைப்புக்கு ரூ.100ம், வெளியூர் அழைப்புக்கு ரூ.200ம் மாதாந்திரக் கட்டணமாக கைதிகளிடம் இருந்து சிறைத் துறை வசூல் செய்கிறது. ஆனால் கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது மட்டுமே கைதிகள் வழக்கறிஞர்களை சந்தித்து பேச முடியும்.
பல சமயம் தகவல் தொடர்பு இல்லாததால் வழக்கறிஞர்கள் விசாரணையின்போது ஆஜராகாமல் இருந்துவிடுகிறார்கள். கடந்த 15 மாதங்களாக திகாரில் இருந்த ஆ.ராசா இந்த சிக்கல்களை எல்லாம் உணர்ந்து தான் கைதிகளை வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கக் கோரி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications