மிரட்டல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
ஈரோடு: முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியத்தை மிரட்டிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கோபி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. அவர் மீது ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து அன்றைய முதல்வர் கருணாநிதி என்.கே.கே.பி ராஜா மீது துணிந்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அன்று அப்போதைய பவானிசாகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் தன்னை என்.கே.கே.பி ராஜா மிரட்டுவதாக நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் என்.கே.கே.பி ராஜா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோபி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது ராஜா கோபி நீதிமன்றத்தில் ஆஜரானார். அதே போன்று முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியமும் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் வழக்கு விசாரணையை ஜூன் 16 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன் மூலம் ஈரோடு திமுக கோஷ்டி பூசல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.