தடுமாறும் விஜய்? "விசிக, கம்யூனிஸ்ட்" கைகளில் துருப்பு சீட்டு.. நேரில் சந்திக்கும் தவெக நிர்வாகிகள்
சென்னை: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான மேஜிக் எண்ணை எட்ட முடியாமல் விஜய் தடுமாறி வருகிறார். மலை போல் நம்பியிருக்கும் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்னும் பச்சைக்கொடி காட்டாத நிலையில் இன்று அதிரடி திருப்பமாக தவெக நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால் அந்த கட்சி ஆட்சி அமைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தவெகவிற்கு 108 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களுடன் 113 ஆக பலம் உயர்ந்துள்ளது.

கம்யூனிஸ்ட்களின் முடிவை பொறுத்து - திருமா
எனினும் மெஜாரிட்டிக்கு 118 தேவை என்பதால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். விஜய் பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டினால் மட்டுமே அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த கட்சிகள் தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தங்கள் முடிவை அறிவிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. கம்யூனிஸ்ட்களின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிப்பதாக விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கூறியுள்ளார்.
நேரில் சந்தித்து ஆதரவு கோரும் தவெக
நொடிக்கு நொடி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசிப்பதாக நேற்று முதலே அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்த நிலையில் ஆளுநர் தாமதமும் இதற்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், தவெக தரப்பில் இருந்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோர திட்டமிடப்பட்டுள்ளது.
சண்முகத்திடம் நேரில் சந்திப்பு
சிடிஆர் நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஆதரவை கோரியுள்ளோம். ஆலோசித்து முடிவு செய்வார்கள். பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரவில்லை. ஆளுநர் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவனையும் தவெக மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய், திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை கோரியிருந்த நிலையில், தற்போது நேரில் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறார்கள்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தையும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியலில் நொடிக்கு நொடி மாறுபடும் அதிரடி திருப்பங்கள் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications