Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவினர் இல்லத் திருமணத்தில் ஜெ. சொன்ன குருவிக் கதை!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுக பிரமுகர்கள் இல்லத் திருமணங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்து குருவிக் கதை ஒன்றையும் சொன்னார்.

முன்னாள் எம்.பி.யும், திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் மகன் டாக்டர் பாலு-அபிநயா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் எம்எல்ஏ மகள் கவிதா-கார்த்திக், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜு மகள் வித்யா-கமல்நாத், குன்னம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்தமிழ்செல்வன் மகன் மணிவண்ணன்-சித்ரா ஆகிய 4 ஜோடிகளின் திருமணம் இன்று சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

இத்திருமணங்களை முதல்வர் ஜெயலலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். வழக்கம் போல தனது பேச்சின்போது கதை ஒன்றையும் சொன்னார். இந்த முறை அவர் சொன்னது குருவிக் கதையாகும். அந்தக் கதையைக் கேட்போமா...

திருமணம் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆனந்தமயம் ஆக்குகின்ற அழகிய நிகழ்வு. உண்மையான அன்பைப் பகிர்ந்துகொள்ள கிடைக்கின்ற அற்புதமான வாய்ப்பு. பெற்றோரைப் பிரிந்து பிறந்து வளர்ந்த சூழலையும் துறந்து திருமாங்கல்யம் அணிவிக்கின்ற அந்த நிமிடம் தொடங்கி ஒரு புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணப்பெண்ணை கண்ணின் இமையாகக் காக்க வேண்டிய பொறுப்பு மணமகனுக்கு உண்டு.

அதுபோலவே, கணவனுக்கு சிக்கல் வரும்போது விடையாகவும்; விக்கல் வரும் போது நீராகவும் மாறுகின்ற அன்பு மனம் கொண்டவளாக மணமகளும் திகழ வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் இடையிலான உறவை இனிதாக்கிக் கொள்ளல் வேண்டும்.

கடற்கரை ஓரமாக பெரிய மரம்...

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நான்கு முட்டைகளை இட்டு அடைகாத்தும் வந்தது.

ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒருநாள் பெரும் காற்று வீசியது. அலைகள் பொங்கி எழுந்தன. அப்போது கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறி கதறின.

கடல் நீரில் கூடு விழுந்த இடத்தைக் குருவிகள் சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனமுடைந்து அழுதது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நாம் காணவேண்டும் இல்லையேல் நான் உயிர் வாழமாட்டேன் என்றது.

ஆண் குருவி சொன்னது...

ஆண் குருவி சொன்னது, அவசரப்படாதே! ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத்தான் விழுந்து மூழ்கி உள்ளது. தண்ணீரில் கூட்டுடன் விழுந்ததால் முட்டைகள் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால், இந்த கடலில் உள்ள தண்ணீரை கொஞ்சம் வற்ற வைத்தால் போதும் முட்டைகளை நாம் மீட்டு விடலாம் என்றது ஆண் குருவி.

கடலை எப்படி வற்ற வைப்பது? முட்டைகள் பொறிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே, நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயலவேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துச் சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்ப வந்து, மீண்டும் நீரை எடுத்துக்கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே விடாமல் மொண்டு மொண்டு கொண்டு போய் கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர்மட்டம் குறைந்து தரை மட்டம் தெரியும். அப்போது முட்டைகள் வெளிப்படும் என்றது நம்பிக்கையோடு அந்த ஆண் குருவி.

இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்றென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக்கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டு போய் தொலைவில் கக்கின. இப்படியே நாள் முழுதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, குருவிகளின் நீரகற்றும் படலம்.

அப்போது...

அப்போது, அந்தக் கடற்கரை ஓரமாய் மகாசக்திகள் நிரம்பிய மகான் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆள் இல்லாத அந்த அத்துவானப் பகுதியில் கீச் கீச் என்ற சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் கடலுக்கு மேலே பறந்து தண்ணீரை தன் வாயின் வழியே அள்ளிச் சென்று தொலைவில் போய் உமிழ்வதைப் பார்த்தார்.

உடனே அந்த மகான் கண்களை மூடி அமர்ந்தார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்வுகளும் படம் போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும்; கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்டு தன் துணையிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்னும் ஆண் குருவியின் தவிப்பும் அவர் உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவபலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின்வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டவாறே ஆளுக்கொரு முட்டையை அன்போடு பற்றிக்கொண்டு வேறிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தன.

அப்போதே சொன்னேன் பார்த்தாயா...

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒருநாள் உழைப்பில் கடல் நீரையே குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா...? என்றது ஆண் குருவி பெருமிதமாக!

முனிவர் புன்சிரிப்போடே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார். குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால்தான். ஆனால் அந்தக் குருவிகளுக்கோ முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ தெரியாது.

அதே சமயம் குருவிகள் மட்டும் கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்! அவரை மனம் நெகிழ வைத்தது குருவிகளின் அபார முயற்சிதான்!

ஆக...

ஆக, இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளாலும்தான் முனிவராலும்தான். முனிவரின் ஆற்றல் அவற்றிற்கு பக்கபலமாக வந்து சேர்ந்தது. ஆனால் குருவிகளின் உழைப்புதான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

எனவே, நோக்கம் நியாயமானதாக இருந்து நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால் இறை அருளே பக்கபலமாக வந்து நின்று எந்த மகத்தான சாதனைகளையும் நிகழ்த்த நமக்கு உறுதுணை செய்யும் என்பதை இன்று இருகரம் பற்றி இருக்கும் மணமக்களுக்கும் சரி; இரு இலையைப் பற்றி இருக்கும் என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளுக்கும் சரி; வெற்றி நிச்சயம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+