கலாம் முன் நிறுத்தப்பட அத்வானி தான் முக்கியக் காரணம்: சு.சாமி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கும் யோசனையை முதலில் கூறியதே நான் தான் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்கினால் என்ன என்று நான் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் தெரிவித்தேன். உடனே அவர் இது சாத்தியம் தானா என்றும், கலாமுக்கு யாரெல்லாம் ஆதரவளிப்பார்கள் என்பதையும் கண்டறியுமாறு கூறினார். அதற்கு முன்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கலாம் சம்மதிப்பாரா என்பதை கண்டறியுமாறு கூறினார்.
நானும் கலாமை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து இது குறித்து கூறினேன். ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சரி, தேர்தல் என்றால் வேண்டாம் என்றார் அவர். நீங்கள் போட்டியிட்டால் நிச்சயம் 55 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறி அவரை ஒருவகையாக தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்தேன்.
மேலும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவையும் டெல்லியிலும் லக்னெளவிலும் சந்தித்து கலாமுக்கு ஆதரவு கோரினேன்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்திற்கு அத்வானி தான் மிக முக்கியக் காரணம். நான் வெறும் தூது போன ஹனுமான் என்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அத்வானி வீட்டில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் தான் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்கும் சாத்தியம் குறித்து அறியுமாறு சாமி கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் அடுத்த நாளே கலாமை சந்தித்து சம்மதிக்க வைத்துள்ளார். அதன் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தம் பக்கம் இழுக்க அவர் முடிவு செய்தார். கடநத் 2002ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலாமுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதால் அவரை சாமி சுலபமாக தம் பக்கம் இழுத்துவிட்டார்.
கடந்த 11ம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் கலாமுக்கு ஆதரவு அளிக்க முலாயம் சம்மதம் தெரிவித்துவிட்டு கமுக்கமாக இருந்துவிட்டார். அதன் பிறகு சாமி மமதாவையும் தம் பக்கம் இழுத்துவிட்டார். அதன் பிற்கு நடந்தது அனைவரும் அறிந்ததே.












Click it and Unblock the Notifications