ஜெ. யானைகள் வாரியம் அமைத்து சங்மாவை தலைவராக்கலாம்: ஈ.வி.கே.எஸ்.!!
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அப்துல் கலாமுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
பதில்: ஏன் முடியாது. குடியரசுத் தலைவருக்கான அனைத்து தகுதியும் பிரணாப் முகர்ஜிக்கு உள்ளது. குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தான் சரியான ஆள். அவர் திறமை வாய்ந்தவர், நேர்மையானவர்.
கேள்வி: அன்னா குழுவினர் பிரணாப் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்களே?
பதில்: அதில் சிறிதளவும் உண்மை இல்லை. ஹசாரே கடவுள் மீது மட்டும் தான் இதுவரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவில்லை.
கேள்வி: மக்கள் நேசிக்கும் அப்துல் கலாமை காங்கிரஸ் நிராகரித்தது ஏன்?
பதில்: அப்துல் கலாம் ஏற்கனவே 5 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பதவி ஆசை இருப்பதை காட்டினால் அவரது அந்தஸ்து, மரியாதை போய்விடும். தேர்தலில் போட்டியிடுவதை விட்டுவிட்டு அவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும். அவர் குதிரை பூட்டிய சாரட்டில் செல்ல இனியும் ஆசைப்படக் கூடாது.
கேள்வி: திமுக தலைவர் கருணாநிதி கலாம் என்றால் கலகம் என்று கூறியது சரியா?
பதில்: கருணாநிதி வார்த்தை விளையாட்டில் வல்லவர். அவர் இதை நகைச்சுவை உணர்வுடன் தான் சொல்லியிருப்பார். அதனால் அதை பெரிய குறையாகக் கருதி விமர்சிப்பது தவறு.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா சங்மாவை ஆதரிப்பது பற்றி?
பதில்: இது ஜெயலலிதாவின் தகுதிக்கு மீறிய விஷயம் ஆகும். வேண்டும் என்றால் ஜெயலலிதா சங்மாவை தமிழகத்திற்கு வரவழைத்து அவரை ஒரு வாரியத்தின் தலைவர் ஆக்கலாம். அதைவிடவும் அந்தஸ்தான பதவி அளிக்க விரும்பினால் யானைகளுக்கென்று ஒரு வாரியம் அமைத்து அதற்கு சங்மாவை தலைவராக்கலாம். அது தான் அவரால் முடிந்த காரியம் என்றார்.