குடிநீர் பிரச்சனை: என் வீட்டுக்கு விடப்படும் குடிநீரைக் குறையுங்கள்: டெல்லி முதல்வர் உத்தரவு
டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சில பகுதிகளில் மட்டும் எந்நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், பல பகுதிகள் ஒரு சொட்டு நீரின்றி வாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மத்திய டெல்லியில் உள்ள லட்யன் பங்களா பகுதிக்கு அளிக்கப்படும் குடிநீர் அளவைக் குறைக்குமாறு டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எப்பொழுதும் குடிநீர் பெறும் பகுதிகளில் நீரின் அளவைக் குறைத்து அதை பிற இடங்களுக்கு கொடுக்குமாறு நான் டெல்லி குடிநீர் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவருக்கும் போதிய தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுமாறு டெல்லி குடிநீர் வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
லட்யன் பங்களா பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவைக் குறைக்கக் கூறியுள்ளேன். மேலும் லட்யன் பகுதியில் உள்ள எனது வீட்டிற்கு வழங்கப்படும் நீரின் அளவையும் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
யமுனையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை ஹரியானா அரசு குறைத்ததால் தான் இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.