கர்நாடக மாஜி எம்.பி. மகள் கடத்தப்படவில்லை, எல்லாம் நாடகமாம்!
பெங்களூர்: கர்நாடக முன்னாள் எம்.பி. ஹெச்.ஜி.ராமுலுவின் மகள் பெங்களூரில் கடத்தப்பட்டு சென்னை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். ஆனால் அவரை யாரும் கடத்தவில்லை என்றும், அவர் தானாகத் தான் அங்கு ஓடியிருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 4 முறை எம்.பி.யாக இருந்தவர் ஹெச்.ஜி. ராமுலு. அவரது மகள் விஷ்ணுவந்தனா(47). அவர் தனது கணவர் ரவிக்குமாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் பெங்களூர் வந்தார். விஷ்ணுவந்தனா, ரவிக்குமார் மற்றும் உறவினர் டாலி ஆகிய 3 பேர் கடந்த திங்கட்கிழமை ஜெயநகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றனர். அங்கு விஷ்ணுவந்தனா கடத்தப்பட்டார்.
கடத்தியவர்கள் அவரது கணவரையும், டாலியையும் தொடர்பு கொண்டு ரூ.35 லட்சம் பணம் கேட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ரயில் நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த அவரை பெங்களூர் போலீசார் மீட்டு அழைத்துச் சென்றனர்.
விஷ்ணுவந்தனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் போலீசாரால் அவரை விசாரிக்க முடியவில்லை. அவரை விசாரித்தால் தான் கடத்தியவர்கள் விவரம் மற்றும் கடத்தப்பட்ட காரணம் தெரிய வரும்.
ஆனால் அவரை யாரும் கடத்தவில்லை என்றும், அவரே தான் ஓட்டம் பிடித்துள்ளார் என்றும், அவர் வேண்டும் என்றே கடத்தல் நாடகமாடுகிறார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications