சென்னையில் போக்கு காட்டும் வெயில்-திடீர்னு மழை பெய்துங்க!
சென்னை: சென்னையில் கடந்த பல நாட்களாகவே போக்கு காட்டிக் கொண்டிருந்த மழை தற்போது அவ்வப்போது பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் அனைவரும் வானத்தை நோக்கி பார்த்தபடி உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் குறைந்து விட்டது. பெரிய அளவில் முன்பு போலவெயில் இல்லை. நல்ல காற்று வீசுகிறது. அதிலும் இரவு நேரங்களில் காற்று சூப்பராக வீசுகிறது. அதேசமயம், கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழையைப் பார்க்க முடிகிறது. வெப்பச் சலனம்தான் இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இந்த மழையைக் காண முடிந்தது. குறிப்பாக பட்டினப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை இருந்தது. ஆனால் ரொம்ப நேரம் இந்த மழை பெய்யவில்லை.
பகல் நேர வெப்ப நிலை தற்போது வெகுவாக குறைந்து விட்டதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர், கூடவே காற்றும் அடித்து வருவதால் மக்களுக்கு நல்ல சுகமாக இருக்கிறது.
வெப்பச் சலனம் நீடிப்பதால் இன்னும் ஒரு வாரத்திற்கு மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.