மூவரின் தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த பிறகு ஆதரியுங்களேன்.: திமுகவுக்கு சீமான் அட்வைஸ்
ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அது தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும்.
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபக்சே பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர்.