குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பியது காங்கிரஸ் செயற்குழு
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம், குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக கூட்டப்பட்டது. இந்த செயற்குழுவில் பேசிய சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட அனைவரும் பிரணாப்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்றும் அவரது கட்சிப் பணிகளை புகழ்ந்தும் புகழாரம் சூட்டிப் பேசினர்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றிய தமக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கான அனைவருக்கும் பிரணாப் முகர்ஜியும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி, நிதி அமைச்சர் பதவி மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி ஆகிய அனைத்தையும் ராஜினாமா செய்துவிட்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை பிரணாப் தாக்கல் செய்ய உள்ளார்.