சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி அபராதம் வசூல்
சென்னை: இந்த ஆணடு துவங்கி தற்போது வரை சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.2.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வதால் தான் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் அருகே பைக்கில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் தமிழ்மணி விபத்தில் சிக்கி பலியானார். அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தான் அவரது தலையில் அடிபட்டு உயிர் இழந்தார். இது மட்டுமின்றி பைக் விபத்தில் பலியாகுபவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் தான்.
இதையடுத்து உயிர் இழப்பைத் தடுக்க ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சாலையோரங்களில் விழிப்புணர்வு பலகைகளை போலீசார் வைத்துள்ளனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகிறார்கள். இதில் விந்தை என்னவென்றால் அபராதமாக மட்டும் மாதம் ரூ.50 லட்சம் வசூலாகிறது.
இந்த ஆணடு துவங்கி தற்போது வரை ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.80 கோடி அபராதம் வசூலானாது. ஆனால் இந்த ஆண்டில் 5 மாதத்திலேயே கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிக அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறுகையில்,
ஹெல்மெட் அணிவதால் உயிருக்கு உத்தராவாதம் உள்ளது என்பதை மக்கள் உணர்ந்தால் தான் ஹெல்மெட் அணியும் பழக்கம் அதிகரிக்கும். ஹெல்மெட் அணியாமல் சென்று முதல் முறையாக சிக்குபவர்களிடம் ரூ.100ம், மீண்டும் சிக்கினால் ரூ.300ம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.