வெளிநாட்டு பயணங்களுக்கு.. புதிய வரியா? பிரதமர் மோடி மறுப்பு! வதந்தி என விளக்கம்!
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்படி இருக்கையில், வெளிநாட்டு பயணங்களுக்கு மத்திய அரசு புதிய வரியை விதிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், இது வெறும் வதந்திதான் என்று பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி விதிக்கும் திட்டம் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. துளி அளவும் உண்மையில்லை, அத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், மக்கள் மீதான சுமையைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் விளக்கமளித்தார்.
விளக்கமளித்த மோடி
கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வெளிநாட்டுப் பயணங்களுக்கு தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக CNBC-TV18 செய்தி வெளியிட்டது.
அதாவது இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் வாங்கும் டிக்கெட், விசா கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு கூடுதல் வரியை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் பரவின. கச்சா எண்ணெய் விலை உயரும்போதும், போர் காலங்களிலும் இதுபோன்று வரிகளை உலக நாடுகள் விதிக்கத்தான் செய்கின்றன. இதன் அடிப்படையில்தான் CNBC-TV18 செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் இப்படி வரியை விதிக்க எந்த ஐடியாவும் இல்லை என்று பிரதமர் மறுத்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட செய்தி ஊடகம்
பிரதமரின் மறுப்பிற்குப் பிறகு, CNBC-TV18 தனது செய்தியைத் திரும்பப் பெற்று, தவறுக்காக வருத்தம் தெரிவித்தது.
பிரதமர் மோடி தனது x பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "புதிய கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, குடிமக்கள் மற்றும் வணிகர்களுக்கான சுமைகளைக் குறைப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், மக்களின் வணிகம் செய்வதை எளிமையாக்கியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் நிலை
இந்தியாவை பொறுத்தவரை, நம்முடைய கச்சா எண்ணெய் தேவையில் நாம் 85%க்கும் அதிகமாக இறக்குமதியை தான் சார்ந்திருக்கிறோம். எனவே உலகளாவிய எரிசக்தி விலை உயர்வால் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறோம்.
இதற்கிடையில், UAE நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபருடன் பெட்ரோலிய இருப்புக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications