அகதா சங்மா திடீர் தலைமறைவு- நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அப்பொழுது அமைச்சராக உள்ள அவரது மகள் அகதா சங்மாவின் நிலை பற்றி சங்மாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அகதா சங்மாவே முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அகதா சங்மா கலந்து கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து பி.ஏ.சங்மா, ஆதரவு படையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போதும் அகதா சங்மா தென்படவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற இருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்த அகதா திடீரென தம்மால் பங்கேற்க முடியாது என்றும் அருணாசலப்பிரதேசத்தில் மதநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறிவிட்டார்.
கடந்த 10 நாட்களில் 3 முக்கிய நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் மீடியாக்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தலைமறைவாகவே அகதா சங்மா இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனால் மத்திய அமைச்சர் பொறுப்பில் அவர் நீடிக்கிறாரா? தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா? அவரது தந்தைக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் மீடியாக்கள் தவித்து வருகின்றன.