அண்ணா நூலகத்தை திருமண விழாவுக்கு வாடகைக்கு விடுவதா?: ராமதாஸ் கண்டனம்
சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கில் திருமண வரவேற்புகளையும், திரைப்பட விழாக்களையும் நடத்துவதற்காக அரசு வாடகைக்கு விடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அரங்கில் திருமண வரவேற்புகளையும், திரைப்பட விழாக்களையும் நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும், ஆய்வாளர்களும் பயன் பெறும் வகையில் 172 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது.
ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் அமர்ந்து நூல்களை படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நூலகம் அறிவுக் கோவிலாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி உயர் நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்காத அரசு, நூலக அரங்கை நேற்று திருமண வரவேற்புக்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தை சமையல் கூடமாகவும், உணவு பரிமாறும் இடமாகவும் மாற்றி பாழடித்துள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகமே நாற்றம் அடிக்கும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணையில் கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நூலக அரங்கம் வாடகைக்கு விடப்பட வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு இருக்கும்போது திருமண நிகழ்ச்சிக்காக நூலக அரங்கை வாடகைக்கு விட்டது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இது கடுமையாக கண்டித்தக்கது. இனியும் இது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை கைவிட்டு, நூலகத்தை புதுப் பொலிவுடன் நடத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.