அவலத்தில் நெல்லை அரசு பொருட்காட்சி: ஏமாந்துபோன மக்கள்
நெல்லை: நெல்லையில் வருடாந்திர அரசு பொருட்காட்சி அறைகுறையான அரங்குகளுடன் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி கடந்த 29ம் தேதி துவங்கியது. சுற்றுலாத் துறை, சுகாதாரத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை, கல்வி துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 17 அரங்குகள் பொருட்காட்சியில் அமைக்கப்பட உள்ளதாக துவக்க விழாவில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பொருட்காட்சியில் நேற்று வரை பல அரங்குகள் அமைக்கப்படவே இல்லை. காவல்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல துறைகளில் அரங்குகள் இன்னும் முழுமை பெறவில்லை. சில துறைகள் இப்போதுதான் குழி தோண்டி அரங்குகளை அமைக்கும் பணியை செய்து வருகின்றன. பொருட்காட்சி மைதானத்தை தாரை வார்த்த மாநகராட்சி அரங்கில் ஈரடுக்கு மேம்பாலத்தை தவிர எதுவுமே இல்லை. இப்படி அறைகுறையான அரங்குகளோடு பொருட்காட்சியை துவங்கியதால் சனி, ஞாயிற்றுகிழமைகளில் பொருட்காட்சிக்கு சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரு தினங்களாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது பொதுமக்களுக்கு ஆறுதலான விஷயம்.