தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ: மின் உற்பத்தி பாதிக்காது
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையம் உள்ளது. துறைமுகப் பகுதியில் உள்ள இந்த அனல் மின் நிலையத்தில் 2 கன்வேயர் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் 2வது கன்வேயரில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.
ரப்பரால் ஆன இந்த கன்வேயர் பெல்ட்டில் வேகமாகத் தீ பரவியது. உடனே இது குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து கன்வேயரை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணி 3 நாட்களில் முடியும் என்று கூறப்படுகிறது. முதலாவது கன்வேயரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications