எம்.ஜி.ஆர். எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' புத்தக பதிப்புரிமை ஜானகியின் மகனுக்கே! - உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேந்திரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான், முன்னாள் முதல்வர் ஜானகியின் மகன். ஜானகி, எம்.ஜி.ஆரின் மனைவி. எம்.ஜி.ஆர். தனது சுயசரிதையாக 'நான் ஏன் பிறந்தேன்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தநிலையில், 1987-ம் ஆண்டு அவர் இறந்து போனார்.
எனவே அந்த புத்தகத்தின் பதிப்புரிமை எனது தாயார் ஜானகிக்கு வந்தது. இந்தநிலையில் ஜானகி கடந்த 1996-ம் ஆண்டு மரணமடைந்தார். எம்.ஜி.ஆர்., ஜானகி ஆகிய 2 பேருமே 2 உயில்களை எழுதி வைத்துத்தான் இறந்தனர். ஆனால் இந்த புத்தகத்தின் காப்புரிமை, பதிப்புரிமை பற்றி அந்த உயில்களில் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் அந்த புத்தகத்தை 2003-ம் ஆண்டு சுதா விஜயகுமார் மற்றும் ராஜராஜன் பதிப்பகம் ஆகியோர் அச்சிட்டு வெளியிட்டனர். நான் வாரிசுதாரர் என்ற நிலையில், அவர் உரிமை கொண்டாடுவது தவறு.
எனவே 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகத்தின் முழு உரிமையும் எனக்குத்தான் உள்ளது என்று உத்தரவிட வேண்டும். அதில் சுதா விஜயகுமாரும், ராஜராஜன் பதிப்பகமும் தலையிட தடை விதிக்க வேண்டும். 2 பேரும் அந்த புத்தகத்தை ரூ.350 என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சுதா விஜயகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜானகிக்குத்தான் அந்த புத்தகத்துக்கான பதிப்புரிமை உள்ளது. என்றாலும், ஜானகிக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உறவினருக்கே அந்த உரிமைகள் வருகிறது. ஜானகியின் மகனுக்கு அந்த உரிமைகள் வராது' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.சிவகுமார் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், "எம்.ஜி.ஆர். - ஜானகியின் சுவீகாரம் என்று தன்னை சுதா விஜயகுமார் கூறுகிறார். ஆனால் அதற்கான சடங்கான தத்துஹோமம் நடத்தப்படவில்லை என்று சுதா விஜயகுமார் ஒப்புக்கொள்கிறார். தனது திருமண அழைப்பிதழில் தன்னை எம்.ஜி.ஆரின் தத்து மகள் என்று காட்டி இருப்பதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக அழைப்பிதழை தாக்கல் செய்தார்.
31.1.1980 அன்று ஒரே நாளில் சுதா மற்றும் அவரது சகோதரிகள் சீதா, ஜானகி ஆகியோரின் திருமணம் நடந்தது. அழைப்பிதழில் அவர்கள் தங்களை நாராயணனின் மகள் என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். (ஜானகியின் சகோதரர் நாராயணன்). அதுவரை தத்துக்கான சுவீகாரம் எதுவும் நடந்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது.
மனைவியின் வாரிசுக்கே உரிமை...
எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வமான மனைவி ஜானகி. அவர்களின் திருமணத்தில் எந்த சர்ச்சையும் எழவில்லை. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வமான வாரிசு ஜானகிதான். எனவே எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது புத்தகத்தின் பதிப்புரிமை ஜானகிக்குத்தான் செல்லும்.
ஜானகிக்கு கணபதி பட் என்பவர் மூலம் பிறந்தவர்தான் மனுதாரர் சுரேந்திரன். அவர்களுக்கிடையேயான தாய் - மகன் உறவில் முறிவு எதுவும் ஏற்படவில்லை. அந்த வகையில் ஜானகியின் வாரிசு சுரேந்திரன்தான். எனவே ஜானகியிடம் உள்ள உரிமைகள் அனைத்தும் அவரது மரணத்துக்குப் பிறகு சுரேந்திரனிடம்தான் செல்லும்.
தலையிடக் கூடாது
மனுதாரர் சுரேந்திரன் அதை நிரூபித்துள்ளார். எனவே அந்த புத்தகத்தின் முழு உரிமையும் தனக்கு சொந்தமானது என்று அறிவிக்கக் கோருவதற்கு மனுதாரருக்கு உரிமை உள்ளது.
எனவே அவர் கோரியபடி, அந்த புத்தக பதிப்புரிமையில் தலையிட சுதா விஜயகுமாருக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை சுரேந்திரனிடம் சரண்டர் செய்ய வேண்டும். விற்பனை செய்த விவரங்களை அவரிடம் சுதா விஜயகுமார் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார்.