திமுக போராட்டம் கிடக்குது...மதுரை 'மன்னன்' மீது வீடு அபகரிப்பு கேசைப் போட்ட அதிமுக அரசு!
மதுரை: நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு என்று கூறி திமுகவினர் மீது தமிழக அரசு பொய் வழக்குகள் போடுவதாக கூறி அதைக் கண்டித்து திமுகவினர் நேற்று படு மும்முரமாக சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், மதுரை முன்னாள் திமுக துணை மேயர் பி.எம்.மன்னன் மீது வீடு அபகரிப்பு வழக்கை ஒன்றைப் பதிவு செய்து திமுகவை டென்ஷனாக்கியுள்ளது மதுரை போலீஸ்.
மதுரை மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மதுரை 5வது நீதித்துறை நடுவர் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், எனக்கு சொந்தமான வீடு மதுரை அழகரடி 5-வது தெருவில் உள்ளது. இந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி முத்துவுக்கு 3 ஆண்டு ஒத்திக்கு கொடுத்திருந்தேன். ரூ.60 ஆயிரம் பணமும் பெற்றேன்.
இந்நிலையில் ஒத்திக் காலம் முடிந்ததும் ரூ.60 ஆயிரத்தை கொடுத்து வீட்டை காலி செய்யுமாறு முத்துவிடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்தார்கள். மேலும் அப்போது துணை மேயராக இருந்த மன்னனின் தூண்டுதலின் பேரில் 4 பேர் என்னிடம் வந்து ஏற்கனவே உங்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்துவிட்டு வீட்டை வாங்கி விட்டார்கள். எனவே அவர்களது பெயரில் வீட்டை கிரயம் செய்து தருமாறு மிரட்டினார்கள்.
மேலும் துணை மேயர் மன்னன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மதுரை போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மன்னன், ராஜா, முத்து உள்ளிட்ட 6 பேர் மீது கரிமேடு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விரைவில் மன்னன் தூக்கப்படுவார் என்று தெரிகிறது. திமுகவினர் மீது பொய் வழக்குகளை அரசு போடுவதாக கூறித்தான் நேற்று திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோதே மதுரை முன்னாள் துணை மேயர் மீது வீடு அபகரிப்பு வழக்கை மதுரை போலீஸார் பதிவு செய்தது திமுகவினரை டென்ஷனாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications